மும்பை: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதால் விவசாயக் கடனை கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் கிராமம் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை வைத்துள்ளனர்.
பஞ்சாயத்து அலுவலகத்தில் 'முதல்வரே இந்த கிராமம் விற்பனைக்கு' என்று மிகப்பெரிய பேனரை வைத்துள்ளனர். இது பற்றி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். தங்களது கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றாலோ, பயிர் காப்பீடு கிடைக்கவில்லை என்றாலோ நாங்கள் கூட்டாக தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
விதர்பாவின் மற்ற பிற கிராமங்களைப் போலவே டக்டோடா கிராமமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3000 ஆயிரம் பேர் பயிர் கடன்களை திரும்ப செலுத்தவில்லை.
இது பற்றி விவசாயிகள் கூறுகையில், விவசாயக் கிணறுகள் வறண்டுவிட்டன. ஏராளமான பணத்தை செலவிட்டு பயிரிட்ட பயிர்கள் நீரின்றி காய்ந்துவிட்டன. விவசாயக் கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் காய்ந்துவிட்டதால் கடனைத் திருப்பிச் செலுத்துவது முடியாமல் போனது. இப்போது நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது? என்கிறார்கள்.
மேலும், நாங்கள் வங்கிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் பெற்று விவசாயம் செய்தோம். ஆனால் அதனை எங்களால் திரும்ப எடுக்க முடியவில்லை. ஒரு லட்சத்துக்கு ரூ.15 ஆயிரம் வட்டியாக வசூலிக்கப்படுகிறது. அந்த வட்டியைக் கூட செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால்தான் எங்கள் கிராமத்தையே விற்று விடலாம் என்று விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளோம் என்கிறார்கள் கனத்த குரலில்.
தற்கொலை செய்து கொள்ளும் நிலையில்தான் விவசாயிகள் உள்ளனர். மாநில அரசும் எங்களை கைவிட்டுவிட்டது என்று கூறுகிறார்கள் விவசாயிகள் தங்களது கைகளைப் பிசைந்தபடி.