புது தில்லி: தேர்தல் முடிந்தபின் நீரவ் மோடி வெளிநாட்டிற்கே அனுப்பி வைக்கப்படுவார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், கடந்த ஆண்டு பிரிட்டனுக்கு தப்பியோடினர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக உலவி வருவதாக அந்நாட்டின் நாளிதழ் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. அதில், லண்டனில் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் நீரவ் மோடி வசித்து வருகிறார்; புதிதாக வைர வியாபாரத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், நீரவ் மோடியின் தற்போதைய புகைப்படங்களும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை முன்னரே விடுத்த கோரிக்கையை ஏற்று லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு (48) எதிராக கைது ஆணை பிறப்பித்தது. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக நீரவ் மோடி லண்டனில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது நீரவ் மோடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் தேர்தல் முடிந்தபின் நீரவ் மோடி வெளிநாட்டிற்கே அனுப்பி வைக்கப்படுவார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.
இதுபற்றி தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பா.ஜ.க.வினர்தான் நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் செல்ல உதவினர். அவர்களே தற்பொழுது அவரை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு வேலை செய்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலை மனதினில் வைத்தே அவர்கள் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர். தேர்தல் முடிந்தபின் அவர்களே பத்திரமாக அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விடுவர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.