எப்போதும் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு உழைத்தவர் பாரிக்கர் என மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை புகழஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எப்போதும், விடாமுயற்சியுடன் தன்னுடைய இலக்கை எட்டிப் பிடிப்பதில் குறியாக இருந்தவர் பாரிக்கர். முன்பு, கோவாவின், ஆர்எஸ்எஸ் பிரசாரகராக அவர் இருந்தபோது, அர்ப்பணிப்புடனும், மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டும் விடாமுயற்சியுடன் பாடுபட்டார்.
அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், பாதுகாப்புப் படையினரின் வளர்ச்சியை மேம்படுத்த புதிய கோணத்தில் யோசித்து சிறந்த முறையில் வழி நடத்தினார்.
எந்த பணியை மேற்கொண்டாலும், அதிக சிரத்தையுடன், மிகுந்த ஈடுபாட்டுடன், சுமுகமாகவும், அதிக விருப்பத்துடன் யாரைப் பற்றியும் கருதாமல், தேசத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அப்பணிகளை செய்து முடிப்பவர் பாரிக்கர். இதுபோன்ற, பொதுநல விரும்பியை காண்பது மிகவும் அரிது.
மிகச்சிறந்த சமூக மற்றும் அரசியல் சேவகராகவும், மக்களால் என்றும் நினைவுக் கூரப்படுபவராகவும் இனி அவர் திகழ்வார் என்று தெரிவித்துள்ளார்.