நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட நடப்பு நிதியாண்டில் கூடுதல் பங்கு விலக்கல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வசமுள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதுதான் பங்கு விலக்கல் நடவடிக்கையாகும். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.80,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நடப்பு நிதியாண்டில் ரூ.80,000 கோடி அளவுக்கு பங்கு விலக்கல் இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி மத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ.85,000 கோடி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் இலக்கைவிட அதிமாக பங்கு விலக்கல் நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ரூ.90,000 கோடி பங்கு விலக்கல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் இடிஎஃப் வெளியீடு மூலம் ரூ.9,500 கோடி கிடைத்துள்ளது. ஊரக மின்வசதியாக்கல் நிறுவனம் மற்றும் மின்சார வசதிக்கான நிதிக் கழகம் ஆகியவற்றின் இணைப்பு மூலம் ரூ.14,500 கோடியும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.