தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகனின் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தியதற்காக விமானப் படைக்கு கட்டணமாக ஓபிஎஸ் ரூ.14.91 லட்சம் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவசர மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த ஜூலை 1-ஆம் தேதி மதுரையில் இருந்து விமானப்படை ராணுவ விமானம் "ஏஎன்-32" மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. அது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது.
அதற்கு அடுத்த 2 நாட்களுக்கு முன்னதாக தில்லி சென்ற ஓபிஎஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நன்றி சொல்வதற்காக நேரம் கேட்டதாகவும், சந்திக்க முடியாமல் திரும்புவதாக ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதையடுத்து ஏர் ஆம்புலன்ஸ் கட்டணத் தொகைக்கான ரசீது, விமானப் படை தலைமையகத்தில், ஜூலை 26-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மருத்துவ சிகிச்சைக்காக ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், விமானப் படை தலைமையகத்தில் இருந்து ரசீது அனுப்பப்பட்ட பிறகு, கடந்த ஆகஸ்ட மாதம் 14-ஆம் தேதி கட்டணத் தொகையான ரூ.14 லட்சத்து 91 ஆயிரத்தை தமிழக அரசின் மூலம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு கேட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்து, விமானப்படை விமானம் அனுப்பப்பட்டதால், மாநில அரசின் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.