மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை மேலும் 81 காசுகள் சரிவைக் கண்டது.
உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் பதற்றம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டிலிருந்து அதிகளவில் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு தொடர் சரிவைக் கண்டு வருகிறது.
அந்த வகையில், இன்று திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையிலும் ரூபாய் மதிப்பானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதும் 81 காசுகள் சரிவடைந்து ரூ.72.65-ஆக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில், 34 பைசா உயர்ந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.84 -ஆக இருந்தது.
சீனாவின் இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதை சந்தை வல்லுநர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.