அலிகார் : உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை குற்றவாளிகளுடன் போலீஸார் நடத்திய துப்பாக்கி சண்டையில் 2 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் முஸ்டாக்கிம், நவ்ஷித் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், அலிகார் மாவட்டம், ஹார்டுவானஜின் மஹுவா கிராமத்தில் குற்றவாளிகள் இரண்டு பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் தூரத்திச் சென்றனர். அப்போது அங்கிருந்த பழைய கட்டடத்தில் மறைந்திருந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீஸார் குற்றவாளிகள் இருவர் மீதும் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பல்வேறு வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளுக்கிடையே என்கவுண்டர் காட்சியை போலீஸார் அனுமதியுடன் செய்தியாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து மாநிலத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.