சென்னை: சின்னத்திரை நடிகை நிலானி, சென்னை மதுரவாயலில் உள்ள தமது இல்லத்தில் கொசு மருந்தை குடித்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சினிமா உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருடன் பழகி வந்த நிலானி, பின்னர் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த 16-ஆம் தேதி கே.கே.நகரில் நடுசாலையில் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீஸார் நிலானியை எந்த நேரத்திலும் கைது செய்யக் கூடும் என்பதால் அவர் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் லலித்குமார் தற்கொலைக்கும், தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த நிலானி விளக்கம் அளித்ததுடன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று தனக்கும் லலித்குமார் தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
இதனிடையே தான், லலித் குமாருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சிலர் திட்டமிட்டே பரப்பி வருவது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் நிலானி கூறி வந்தார்.
இந்நிலையில், மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் உள்ள இல்லத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதாக நிலானி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்கள் அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றபோது, நிலானியின் குழந்தைகள் ஒடிவந்து தனது தாய் விஷம் குடித்து விட்டதாக கதறி அழுதுள்ளனர்.
தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த நிலானியை மீட்டு கே.கே. நகரில் உள்ள அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அவர் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளது தெரிய வந்துள்ளது.