திருவனந்தபுரம்: கேரளாவில் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள், தற்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், மீண்டு கேரளாவில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (செப்.25, 26) பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் 64 புள்ளி 4 மில்லி மீட்டரில் இருந்து 124 புள்ளி 4 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை கேரளாவின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு 2-ம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது டுவிட்ட பக்க பதிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.