திருப்பதியில் தாசா சாகித்ய திட்டம் மற்றும் தேவஸ்தானம் இணைந்து சனிக்கிழமை படி உற்சவத்தை நடத்தியது.
திருமலை திருப்பதி தேவஸ்தானமும், தாசா சாகித்ய திட்டமும் இணைந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை திருப்பதியில் படி உற்சவத்தை நடத்தி வருகின்றன. அதன்படி, திருப்பதி மலையடிவராத்தில் உள்ள அலிபிரி பாதாலு மண்டபத்தில் சனிக்கிழமை காலையில் இந்த உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை 4.30 மணிக்கு கோவிந்தராஜர் சத்திரத்தில் இருந்து தாசா சாகித்ய பக்தர்கள் மஞ்சள் ஆடையை அணிந்தபடி பஜனைப் பாடல்களை பாடிக்கொண்டு பாதாலு மண்டபத்தில் கூடினர். அங்கு மந்திராலயம் ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் தலைமை வகித்து, அலிபிரியில் உள்ள முதல் படிக்கு மஞ்சள், குங்குமம் பூசி, பூ மாலைகள் சாற்றி, பழங்களை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி அளித்து பூஜைகள் செய்தார்.
அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகியவற்றில் இருந்து வந்த தாசா பக்தர்கள் 5 ஆயிரம் பேர் பாத யாத்திரையாக திருமலையை அடைந்து ஏழுமலையானை தரிசித்தனர். படி உற்சவ நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.