திருமலையில் புரட்டாசி மாத சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதம் கடந்த திங்கள்கிழமை பிறந்தது. இம்மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவர். விரதம் இருந்து பாதயாத்திரையாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். அதனால் தேவஸ்தானம் புரட்டாசி மாதத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கும் விஐபி தரிசனத்தை ரத்து செய்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 22, 23, 29, 30 மற்றும் அக்டோபர் 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அந்த நாள்களில் விஐபிக்களுக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பிரம்மோற்சவ உண்டியல் வருமானம் ரூ.20.52 கோடி
திருமலையில் கடந்த 8 நாள்களாக நடைபெற்ற பிரம்மோற்சவத்தின்போது உண்டியல் மூலம் ரூ.20.52 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலையில் கடந்த 13ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வாகனச் சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் அன்னதானம் செய்ததோடு, குடிநீர், பால், மோர் உள்ளிட்டவற்றையும் வழங்கியது. பிரம்மோற்சவ நாள்களில் தேவஸ்தானத்திற்கு கிடைத்த வருவாய் தொடர்பான பட்டியலை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.