மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.
மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாட்களும் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சமாகும். பித்ரு வழிபாடு, நம் இல்லற வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். பித்ருக்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கப்பெறும்.
மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களைத் திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.
மகாளய பட்சத்தில் வரும் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு, கொடுக்க இயலாதவர்கள், அமாவாசை திதியிலாவது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.
மகாளய பட்சம் என்னும் இந்த அரியச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நம் குழந்தைகளின் வாழ்க்கையும் செழிப்பாகும் என்பது உறுதி.