ஏழுமலையானின் பக்தித் தத்துவத்தை உலகம் முழுவதும் பெரிய அளவில் பிரசாரம் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று திருமலை சின்ன ஜீயர் சுவாமிகள் வலியுறுத்தினார்.
திருப்பதி தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்யப் பிரபந்த திட்டத்தின் சார்பில் திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் 3ஆவது நாலாயிர திவ்யப் பிரபந்த மகோற்சவம் நடைபெற்றது. இதை, ஏழுமலையானுக்கு பூஜை செய்து சின்ன ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுமார் 220 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டு நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். அப்போது திருமலை மடத்தின் சின்ன ஜீயர் ஸ்வாமிகள் உரையாற்றினார். அவர் கூறியது:
உடையவர் என்று அழைக்கப்படும் ராமானுஜர் அருளியபடி ஏழுமலையானுக்கு கைங்கரியங்கள் குறைவில்லாமல் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை ஆசாரப்படி பாராயணம் செய்து, அதை பக்தர்கள் அறியச் செய்து வருகிறோம். அதன்படி ஏழுமலையானின் பக்தித் தத்துவத்தை உலகம் முழுவதும் பெரிய அளவில் கொண்டு சேர்க்க இதன் மூலம் முயன்று வருகிறோம் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதனிடையே, திருமலையில் ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை வேத பண்டிதர்கள் திவ்யப் பிரபந்த கோஷ்டிகானம் செய்தனர்.