குழந்தை பாக்கியம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

குழந்தை பாக்கியம் உண்டா / இல்லையா எனத் துல்லியமாகக் கூற மானிடப் பிறப்பில்..
குழந்தை பாக்கியம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

1. குழந்தை பாக்கியம் உண்டா / இல்லையா எனத் துல்லியமாகக் கூற மானிடப் பிறப்பில் தோன்றிய ஜோதிடர்களுக்கு அனுமதி இல்லை. இது ஒரு பிரம்ம ரகசியம். ஏன் எனில் ஒரு ஜாதகரின் கர்ம வினைப்பயன் தான் இதனைத் தீர்மானிக்கிறது. அதேபோல் ஒரு ஜாதகருக்கு எத்தனைக் குழந்தைகள்; ஆண் குழந்தை உண்டா? பெண் குழந்தை உண்டா? என சில குறிப்புகள் ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் என்பது நிச்சயம். கணவன் மற்றும் அவர்தம் மனைவி இவர்கள் இருவரின் ஜனன கால ஜாதகத்தையும் ஆய்வு செய்த பின்னரே இதனைத் தீர்மானிக்கப்படும். குழந்தை பாக்கியமே இல்லை என ஒரு கணவன் அவர்தம் மனைவி இவர்களின் ஜனன கால ஜாதகத்தை ஆய்வு செய்து அறுதியிட்டு உறுதியாக / தீர்மானமாக முடிவான பின்னரும் ஆயிரத்தில் ஒரு தம்பதியினருக்கு இறை அருளால் குழந்தை பாக்கியம் பெற்றதையும் காணமுடிகிறது. 

2. ஒரு ஆணுக்கு, குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா எனக் கூற வேண்டுமானால், லக்னத்திற்கு 5-ம் பாவத்தையும் (இது புத்திர ஸ்தானம் ஆகும்). புத்திர காரகர் ஆன குருவின் நிலையையும் ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தை ஆராய்ந்து, பின்னர் அறிய வேண்டும். அதேபோல், ஒரு பெண்ணிற்கு, குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா எனக் கூற வேண்டுமானால், லக்கினத்திற்கு 9-ம் பாவத்தையும் (இது பாக்கிய ஸ்தானம் ஆகும்) புத்திர காரகரான குருவின் நிலையையும் ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தை ஆராய்ந்து, பின்னர் அறிய வேண்டும். இங்குப் புத்திர, என்பது ஆண் மற்றும் பெண்குழந்தை என, இந்த இரு பாலரையும் குறிக்கும். புத்திர தோஷம் உள்ள கணவன் மற்றும் மனைவி இருவருள் ஒருவருக்கு இருப்பினும் குழந்தை பிறப்பில் சற்று தாமதமோ அல்லது குழந்தை பாக்கியமே இல்லாமலும் போக வாய்ப்பு. அதனைப் பலவித ஆய்வுகளின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்ய முடியும். 

3. சனி, ராகு அல்லது கேது அல்லது குரு இவர்கள் சேர்ந்தோ அல்லது தனித்தோ லக்கினத்திற்கு 5ல் இருந்தால், குழந்தை பாக்கியம் தாமதமாகும். பொதுவாக, ஜோதிட குறிப்பு என்னவென்றால், லக்னத்திற்கு 5ஆம் அதிபதி ஆண் கிரகமாயின், ஆண் குழந்தை என்றும், பெண் கிரகமாயின் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறுகிறது. தாமதமாகப் பெண் குழந்தை பிறந்தால் அதன் பெற்றோர்களுக்கு, சகல வளத்தையும் அளிக்கும் என்றும், அதுவே ஆண் குழந்தை தாமதமாகப் பிறந்தால் அதன் பெற்றோர்களுக்கு, அவ்வாறு கிடைக்காது. 

4. சில கிரக அமைப்புகளைக் கொண்டு ஒரு தம்பதியினருக்கு ஒரே குழந்தை தானா அல்லது பல குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளதா என அந்த தம்பதியினரின் ஜனன கால ஜாதகத்தைக் கொண்டு அறியலாம். ஆனால் தற்போதுள்ள நிலையில் அதாவது பெற்றோர்களே ஒரு குழந்தையே போதும் எனத் தீர்மானிப்பதால் அனைத்து ஜோதிடர்களும் குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா என மட்டும் கூறிவிடுகின்றனர். ஆனால், ஒரு குழந்தை மட்டும் தான் என அவர்களுக்கு அறியவருமாயின், எந்த காரணம் கொண்டும் கருவுற்ற பின் அதனைத் தள்ளிப் போடவோ அல்லது கருச்சிதைவோ செய்ய வேண்டாம் எனக் குறிப்பால் உணர்த்துவார்கள். அதே போல் குழந்தைகளின் பிறப்பால் ஜாதகருக்கு, குழந்தைகளால் நன்மைகள் உண்டா அல்லது தீமைகள் ஏதேனும் உண்டா என ஜோதிட குறிப்பை அறிந்து கூறுவதும் உண்டு.

5. ஒரு ஜாதகருக்கு அல்லது தம்பதியினருக்கு எத்தனை குழந்தைகள் என அறிவதற்கு, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 5ஆம் அதிபதி (புத்திர ஸ்தான அதிபதி); அம்சத்தில் எந்த வீட்டில் (ராசியில்) இருக்கிறாரோ, அந்த ராசி முதல், ராசி சக்கரத்தின் ஜென்ம லக்கினம் வரை எண்ணி வரும் எண்ணிக்கை உடைய குழந்தைகள் பிறக்கும் என ஜோதிட விதி கூறுகிறது. இருப்பினும் இந்த எண்ணிக்கையில் கேது / மாந்தி போன்ற பாவிகள் இருப்பின் அது குழந்தையின் இறப்பைப் பற்றியோ அல்லது கருச்சிதைவைப் பற்றியோ கூறும். 

6. மேலும், ஜோதிடத்தால், ஒரு குழந்தை பிறப்பின் காலத்தைப் பற்றியும் அறுதியிட்டுக் கூறிட முடியும். அதாவது அந்த ஜாதகரின் எந்த தசா புத்தி காலத்தில் இந்த குழந்தை பிறப்பு ஏற்படும் என்பதனை தெளிவாகக் கூறிடும். அதே போல் ஒரு குழந்தையின் பிறப்பு சாதாரணமாகப் பிறக்குமா அல்லது (சிசேரியன்) அறுவை சிகிச்சை மூலம் பிறக்குமா 
என்பதனைப் பற்றியும் அறியமுடியும். ஒரு ஜாதகரின் பிள்ளைகள் நல்லவர்களா அல்லது தீயவர்களா எனவும் கூறிடமுடியும். அதாவது பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளால் கஷ்டமும் மனக்கவலையும் ஏற்படுத்துமா என்பதனையும் அறிந்திட முடியும். 

7. பிறக்க போகும் குழந்தைகள் இரட்டை குழந்தைகளாக இருக்குமா என்பதனையும் குறிப்பால் உணர்த்தும். எந்த கிரகங்களின் தசையில் இவ்வாறு இரட்டை குழந்தை பிறக்கும் எனவும் அறுதியிட்டுக் கூறிட முடியும். யாருக்குச் சொந்த குழந்தையில்லை எனவும் அதனால் தத்துப்பிள்ளை ஏற்படும் யோகம் யாருக்கு என்பதனையும் ஜோதிடம் குறிப்பால் உணர்த்தும். எந்தெந்த பாவத்தொடர்புகளின் போது அந்த தம்பதியினர் தத்து எடுப்பார்கள் எனவும் உணர்த்தும். அதே போல் எந்தெந்த ஜாதகர்கள், தாம் பெற்றெடுக்கும் குழந்தையைத் தத்து கொடுப்பர் எனவும் மேலும் அவ்வாறு பிறக்கும் குழந்தை பெற்றோரிடம் வளர மாட்டான் எனவும் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குறிப்பைக் காட்டும். 

8. ஒருவரின், ஜனன ஜாதகத்தில் புத்திர தோஷத்தைப் பற்றி விளக்கமாகக் கூற முடியும். லக்கினத்திற்கு 5-ஆம் அதிபதி சேரும் ஒரு சில கிரகங்களைக் கொண்டு சர்ப்ப தோஷம், பசு தோஷம், பிராமண சர்பத்தால் தோஷம், ஸ்ரீஹத்தி தோஷம், ஸ்த்ரீ சாபம் / தோஷம், பிதுர் சாபத்தால் ஏற்படும் தோஷம் என விளக்கம் அளிப்பதுடன் என்னென்ன பரிகாரம் செய்துவந்தால், மேற்படி புத்திர தோஷ நிவர்த்தி பெற வாய்ப்பு உள்ளது எனவும் கூறிட முடியும். 

9. குலதெய்வ வழிபாட்டில் தடை ஏற்பட்டவர்களுக்கும், பித்ரு தோஷம் கொண்டவர்களுக்கும், பிரம்மஹத்தி தோஷம் உடையவர்களுக்கும், குழந்தை பிறப்பு எளிதில் அமைய வாய்ப்பு இல்லை.

பரிகாரம்:

கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம் பக்கத்தில் குடிகொண்டுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷ அம்பிகையை வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் ஏராளம். அங்குச் சென்று அம்பிகையின் வாசலில் பசு நெய்யால் மெழுகி, அங்குத் தரும் நெய்யை ஒரு மண்டலம் தம்பதிகள் உண்டு வரக் குழந்தைப் பேறு நிச்சயம். 

அங்குச் செல்ல முடியாதவர்கள், தபாலில் அம்பிகையின் பிரசாதத்தைப் பெற்று குழந்தை பாக்கியம் பெறலாம். குழந்தை பிறந்தவுடன் அங்குள்ள வெள்ளி தொட்டிலில் குழந்தையை இட்டு அம்பிகையை வலம் வருவதைக் காணலாம். குருவாயூரப்பன் திருத்தலத்தில் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் எடைக்கு எடை வாழைப்பழம், வெண்ணெய், வெல்லம் போன்ற பல பொருள்களை, தாம் வேண்டியவாறே செய்வதைக் காண முடிகிறது. ஜோதிடர்களின் கருத்தைக் கேட்டு, அதன்படி செய்யவேண்டிய தோஷ நிவர்த்தி செய்து குழந்தை பாக்கியம் அடைய எல்லாம் வல்ல சீரடி சாயி நாதன் பாதம் பணிந்து வேண்டுகிறேன். 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com