திருப்பதி தெப்போற்சவம்: 2ஆம் நாளில் பார்த்தசாரதி பெருமாள் பவனி
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் இரண்டாம் நாளில் பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் வலம் வந்தார்.
தேவஸ்தானம் நிர்வகிக்கும் இக்கோயிலில் மாசி மாத பௌர்ணமியையொட்டி புதன்கிழமை முதல் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்தில் பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார். தெப்போற்சவத்தைக் காண பக்தர்கள் குளக்கரையில் திரண்டனர். அவர்கள் குளக்கரை படிகளில் நின்று கற்பூர ஆரத்தி எடுத்தனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு, திருக்குளம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தினர் சார்பில் ஆடல், பாடல், பஜனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.