ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம் ரூ.7.94 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் ரகம் வாரியாகப் பிரித்து இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. இந்த ஏலம் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை மாலையில் தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
எனினும், முதல் மற்றும் இரண்டாம் ரக தலைமுடிகள் அதிக அளவில் நிலுவையில் இருந்ததால் மூன்றாவது வியாழக்கிழமை நாளில் அவற்றை தேவஸ்தானம் ஏலம் மூலம் விற்பனை செய்தது.
அதன்படி 4,300 கிலோ தலைமுடி விற்பனையானதில் தேவஸ்தானத்துக்கு ரூ.7.94 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.48 கோடி
திருப்பதி, பிப்.21: ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.48 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி புதன்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.48 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.12 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.4 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.4 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், கல்விதானம் அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
67,744 பேர் தரிசனம்
திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 67,744 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19,308 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி 2 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 8 மணி நேரம் வரை ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.
சோதனைச் சாவடி வசூல் ரூ.1.96 லட்சம்
அலிபிரி சோதனைச் சாவடியை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு 11.59 மணிவரை 74,013 பயணிகள் கடந்தனர். 9,940 வாகனங்கள் இச்சாவடியை கடந்து சென்றன. அதன் மூலம் ரூ.1.96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.20,985 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.