மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், குழிப்பாந்தண்டலத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு பார்வேட்டை விழாவுக்காக வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
மாமல்லபுரம் அருகில் உள்ள குழிப்பாந்தண்டலத்தில் உள்ள லட்சுமிநாராயணர் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் நாளில் பார்வேட்டை விழா நடைபெறும். இதையொட்டி மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவர் குழிப்பாந்தண்டலம் பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இரவு திருமஞ்சனத்துடன் பாரிவேட்டை நடைபெற்ற பின் மறுநாள் உற்சவர் தலசயனப் பெருமாள் கோயிலை வந்தடைவார்.
இந்த ஆண்டு பார்வேட்டை விழாவையொட்டி தலசயனப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வைக்கப்பட்டு குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயணர் கோயிலுக்குப் புறப்பட்டார். மாமல்லபுரம், பூஞ்சேரி, காரணை, வடக்கடம்பாடி, குச்சிக்காடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பெருமாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்.
தலசயனப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட பெருமாள் வியாழக்கிழமை இரவு குழிப்பாந்தண்டலம் லட்சுமிநாராயணர் கோயிலை அடைந்தார். அங்கு திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமைதலசயனப் பெருமாள் கோயிலை வந்தடைவார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமல்லபுரம் கோயில் நிர்வாகிகள், திருக்கழுகுன்றம் கோயில் நிர்வாகிகள், பார்வேட்டை விழாக் குழுவினர் மற்றும் குழிப்பாந்தண்டலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.