பாடல் 2
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய்த்
தானே யான் என்பான் ஆகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே, பாலே, கன்னலே, அமுதே, திருமாலிருஞ்சோலை
கோனே ஆகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே.
எம்பெருமான், எல்லா உலகங்களும் உயிர்களும் தானே என்னும்படி நிறைந்தான், ‘யான்’ (நான்) என்பதும் அவனே ஆகிவிட்டான், (நான் அவனைப் போற்றிப் பாடும்போது) தன்னைத்தானே அவன் துதித்துக்கொண்டான், எனக்குத் தேனாக, பாலாக, கரும்பாக, அமுதாகத் திகழ்ந்தான், திருமாலிருஞ்சோலையின் தலைவனாக நின்றான், என் உயிரை முற்றிலுமாக உண்டான்.