ஆப்பிளுக்கு முன் - சி.சரவணகார்த்திகேயன்; பக்.168; ரூ.170; உயிர்மை பதிப்பகம், சென்னை-18; )044- 2499 3448.
பிரம்மச்சரியம் பற்றிய காந்தியின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாதவை. காந்தி தனது பிரம்மச்சரியத்தைப் பரிசோதிப்பதற்காக இரவில் தூங்கும்போது பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்திருந்தார் என்பதன் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. காந்தியின் இறுதிக் காலத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் பேத்தி முறையுள்ள மநு என்கிற இளம் பெண். காந்தி தனது பிரம்மச்சரியப் பரிசோதனையை அவரை வைத்துத் தொடர்ந்தபோது, காந்தியின் ஆசிரமத்தில் இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனையின் நோக்கத்தை கருத்தளவில் ஏற்றுக் கொண்டவர்களாலும் கூட, நடைமுறையில் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களை மிக அற்புதமாக இந்நாவல் சித்திரிக்கிறது.
மநுவைப் பொருத்த அளவில் "காந்தி அவளுடைய அம்மா'. காந்தியின் பரிசோதனைகளால் மநு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் ஒரு சிறு குழந்தையைப் போல இருக்கிறாள்.
"என் பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் நோக்கம் ஆண், பெண் உடல்களுக்கிடையேயான வேறுபாட்டைக் களைவதே. இது எதிர்பாலின உடல் என்ற எண்ணமெழாத நிலைக்குப் போவது. மனதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே பிரம்மச்சரியம் என்று கொள்ள முடியாது. ஒரு பெண்ணுடன் நிர்வாணமாகப் படுத்திருக்கும் உணர்வே இல்லாமல் போகும்போதுதான் பிரம்மச்சரியம் பூர்த்தியடையும்' என்று பிரம்மச்சரியப் பரிசோதனைகளைக் கைவிடும்படி கேட்ட தக்கர் பாபாவிடம் காந்தி கூறுகிறார். பலரின் வற்புறுத்தலுக்காக தனது பரிசோதனையை சில நாட்கள் கைவிட்டாலும் மீண்டும் காந்தி அதைத் தொடர்கிறார்.
பலர் சிந்திக்கவே தயங்கும் ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு, எந்தவிதமான பொய்யான புனைவுகளுமின்றி - மிகைப்படுத்தலுமின்றி நாவல் எழுதப்பட்டுள்ளது அருமை.