பாகிஸ்தான், (ஈரம் காயாத குருதிச் சரித்திரம்)
பாகிஸ்தான், (ஈரம் காயாத குருதிச் சரித்திரம்) -ஜெகாதா; ரூ.200; பக்.224; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; )044-24331510.
பாகிஸ்தான் வரலாற்றை ஆதிமுதல் அந்தம் வரை சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல். நமது அண்டை வீட்டுக்காரரின் அவல நிலையை எடுத்துரைப்பது போல அமைந்துள்ளது.
இந்தியாவின் சுதந்திரத்துக்கும், பாகிஸ்தானின் சுதந்திரத்துக்கும் நிறைய வேறுபாடு என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், இந்நூலைப் படிக்கும்போதுதான் பாகிஸ்தான் குறைமாதப் பிரசவக் குழந்தையாகப் பிறந்து, சரியான ஜனநாயக ஊட்டச்சத்தின்றி அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை ஆக்ஸிசன் பெற்றுவரும் குழந்தையாகவே இருப்பதை இந்நூல் விவரித்திருக்கிறது.
ஓய்வுக்காக தன்னை காஷ்மீருக்குள் அனுமதிக்காததால், அதை அவமானமாகக் கருதிய ஜின்னாவின் தனிப்பட்ட விரோதத்தையும், ஜின்னாவின் சூழலை தனது அரசியல் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்ட புட்டோவின் சூழ்ச்சியாலும் இந்தோ-பாகிஸ்தான் போர் உருவானதன் சாரத்தை வெளிப்படுத்துகிறது.
பாகிஸ்தானின் அரசியல் பீடத்தைப் பிடிக்க நடந்த போட்டிகள், அதில் நடந்த துரோகங்கள், உயிர்ப்பலிகள் என லியாகத் அலிகான் முதல் பெனசிர் புட்டோ வரை அனைவரது வாழ்க்கையும், அவர்களது பின்புலமும் சுருக்கமாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன.
இது ஒரு தேசத்தின் தனிப்பட்ட வரலாறு மட்டுமல்ல. தெற்காசியாவின் அரசியல் வரலாற்றை திசை திருப்பி உலக அரசியலை மாற்றும் வல்லமை கொண்ட அபாய தேசத்தின் அவலக் கதை என்பதில் சந்தேகமில்லை.