இதுவா ஜனநாயகம்? - என்.முருகன் ஐஏஎஸ்; பக்.211; ரூ.175; தி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை-98.
அரசியல், சமூகம், நாட்டில் அன்றாடம் நிகழும் பொதுப் பிரச்னைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்நூல் எடுத்துரைக்கிறது. "தினமணி' நாளிதழில் வெளியான 43 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2010 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில் எழுதப்பட்ட இத்கட்டுரைகள், சம காலத்தில் நிகழ்ந்த அரசியல், பொருளாதார மாற்றங்கள், பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கூறுகிறது.
"அரசியல்வாதிகளின் ஜாதிக் கணக்கு' என்ற கட்டுரையில் தொடங்கி "இந்திய ரயில்வே பாதை மாற வேண்டும்', "மாநிலங்களைப் பிரிப்பதில் தவறில்லை', "மறுக்கப்படும் நீதி', "காவல் துறையின் குறைபாடுகள்', "ஊழல்: உடனே சரி செய்யப்பட வேண்டும்' என அனைத்துக் கட்டுரைகளிலும் சமூகத்தின் பிரச்னைகளையும், அதைக் கையாளுவதில் அரசியல் கட்சிகள், அதிகாரிகளின் மெத்தனப் போக்கையும் சாடியிருக்கிறார்.
ஒரு நாட்டின் ஜனநாயகம் வெற்றி பெற தரமான, நேர்மையான அரசியல்வாதிகள் தேவை. ஓட்டு வங்கி அரசியலையும், ஊழல்களால் கிடைக்கும் பல்லாயிரம் கோடிகளையும் நம்பி அரசியல் செய்தால் ஜனநாயகம் நாட்டில் முடிவுக்கு வந்து விடலாம் என்பதைக் கூறும் "எது ஜனநாயகம்?' கட்டுரை நாளைய அரசியல் தலைவர்களையும், புதிய வாக்காளர்களையும் கண்டிப்பாக சிந்திக்க வைக்கும். ஜனநாயகம் குறித்து அறிய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஓர்அரிச்சுவடி.