ஓரெழுத்தில் அறுபத்து மூவர் - ப.ஜெயக்குமார்; பக்.464; ரூ.500; உமாதேவி பதிப்பகம், 8529, எச்.ஐ.ஜி.-1, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, அயப்பாக்கம், சென்னை-77.
சூடாமணி நிகண்டில் "சித்திரக்கவி' பற்றிய இலக்கணம் (ஓரெழுத்தில் எழுதுவது) உள்ளது. அவ்விலக்கணத்தைப் பயன்படுத்தி ஓரெழுத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு எழுதப்பட்டுள்ளது.
"அமர்நீதி நாயனார்' வரலாற்றை அகரத்தில் தொடங்கி, அகரத்திலேயேயும்; ஏனாதிநாதர் வரலாற்றை ஏகாரத்தில் தொடங்கி, ஏகாரத்திலும்; ஐயடிகள் காடவர்கோன் வரலாற்றை ஐகாரத்தில் தொடங்கி, ஐகாரத்திலும் என இப்படி அறுபத்து மூவர் வரலாற்றை ஓரெழுத்தில் பாடியுள்ளார் நூலாசிரியர்.
"ஒருவருடைய நட்சத்திரம் என்பது அவருடைய பிறந்த நாளையே குறிக்கும். நாயன்மார்களுக்கு இறைவன் நேராகக் காட்சி தந்து, "இனி உங்களுக்கும் பிரம்மனுக்கும் சம்பந்தமின்றி என்னுடனே கயிலாயத்தில் நிரந்தரமாக இருப்பீர்' என்றே ஆசி கூறுகின்றார். அதனால், எந்தத் தருணத்திலும் நாயன்மார்கள் இறக்கவில்லை. அப்படியென்றால், அவர்களின் இறந்த நாளை (குருபூஜை) நாம் கொண்டாடலாமா? என்கிற நூலாசிரியரின் பதிவு ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.
63 நாயன்மார்கள் அவதரித்த திருத்தலங்களுக்கு நேரே சென்று, அத்திருத்தலங்கள் இருக்கும் இடங்கள், இறைவன்-இறைவி பெயர்கள், கற்கால-தற்காலப் பெயர்கள், தொடர்பு எண்கள், பிறமொழிகளில் பெரியபுராணம் மொழிபெயர்க்கப்பட்டதன் பட்டியல் முதலியவற்றைக் கூடுதலாகப் பதிவு செய்திருப்பது நூலின் தனிச்சிறப்பு. கண்ணைக் கவரும் கோட்டோவியங்கள் நூலுக்கு வலு சேர்க்கின்றன. இந்நூல் அரிய-புதிய முயற்சி.