இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடப்பு சீசனுக்கான புதிய ஊதிய ஒப்பந்த முறையை பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இதில் இந்திய ஆடவர் அணிக்குப் புதிய பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் இடம்பெறும் வீரர்களுக்கு அதிகபட்ச ஊதியம் வழங்கப்படவுள்ளது.
இந்த புதிய ஊதிய பட்டியலில் கடந்த முறை நீக்கப்பட்டிருந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் இடம்பிடித்துள்ளார். அதுபோல மனைவி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் அதிக ஊதியம் பெறும் வீரர்களில் தோனி, 2-ஆம் பிரிவுக்குத் தள்ளப்பட்டார்.
அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான இந்த புதிய ஊதிய ஒப்பந்த முறையானது வீரர்களின் ஆட்டத்திறன் மற்றும் உலகளவிலான அனைத்து கிரிக்கெட் சங்கங்களின் ஊதிய அளவை அடிப்படையாகக் கொண்டு வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
இதில் ஆடவர் அணிக்கு தற்போது கிரேட் ஏ+ பிரிவு முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியம் அனைத்து பிரிவுகளிலும் 200 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது.
ஆடவர் அணி ஊதிய விவரம்:
இதனடிப்படையில் கிரேட் 'ஏ+' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.7 கோடி, கிரேட் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.5 கோடி, கிரேட் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி, கிரேட் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்படவுள்ளது.
இதில் ஆடவர் பிரிவில் இந்திய அணியில் ஒருநாள் போட்டி ஊதியமாக ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளவருக்கு ரூ.35,000 மற்றும் ரிசர்வ் வீரருக்கு ரூ.17,500 வழங்கப்படவுள்ளது. அதுபோல யு-23 ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளவருக்கு ரூ.17,500 மற்றும் ரிசர்வ் வீரருக்கு ரூ.8,750. யு-19 ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளவருக்கு ரூ.10,500 மற்றும் ரிசர்வ் வீரருக்கு ரூ.5,250. யு-19 ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளவருக்கு ரூ.3,500 மற்றும் ரிசர்வ் வீரருக்கு ரூ.1,750 ஊதியமாக வழங்கப்படவுள்ளது.
ஊதிய ஒப்பந்தத்தில் பிரிவு வாரியாக இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்:
கிரேட் 'ஏ+' பிரிவு:
விராட் கோலி
ரோஹித் ஷர்மா
ஷிகர் தவன்
புவனேஸ்வர் குமார்
ஜஸ்ப்ரீத் பும்ரா
கிரேட் 'ஏ' பிரிவு:
அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
முரளி விஜய்
சேத்தேஷ்வர் புஜாரா
அஜிங்க்ய ரஹானே
மகேந்திர சிங் தோனி
ரித்திமான் சாஹா
கிரேட் 'பி' பிரிவு:
கே.எல்.ராகுல்
உமேஷ் யாதவ்
குல்தீப் யாதவ்
யசுவேந்திர சாஹல்
ஹார்திக் பாண்டியா
இஷாந்த் ஷர்மா
தினேஷ் கார்த்திக்
கிரேட் 'சி' பிரிவு:
கேதர் ஜாதவ்
மணீஷ் பாண்டே
அக்ஷர் படேல்
கருண் நாயர்
சுரேஷ் ரெய்னா
பார்தீவ் படேல்
ஜெயந்த் யாதவ்
மகளிர் அணி:
ஆடவர் அணியைப் போன்று மகளிர் அணிக்கும் புதிய ஊதிஒப்பந்த விதிமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் பழைய முறைப்படி ஏ,பி மட்டுமல்லாது சி பிரிவும் ஏற்படுத்தப்பட்டு 3 பிரிவுகள் இடம்பெற்றுள்ளது. 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள வீராங்கனைக்கு ரூ.50 லட்சம், 'பி' பிரிவு வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் மற்றும் 'சி' பிரிவு வீராங்கனைக்கு ரூ.10 லட்சம் ஊதியம் வழங்கப்படவுள்ளது.
இதில் மகளிர் பிரிவில் இந்திய அணியில் ஒருநாள் போட்டி ஊதியமாக ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளவருக்கு ரூ.12,500 மற்றும் ரிசர்வ் வீரருக்கு ரூ.6,250 வழங்கப்படவுள்ளது. அதுபோல யு-23 ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளவருக்கு ரூ.5,500 மற்றும் ரிசர்வ் வீரருக்கு ரூ.2,750. யு-19 மற்றும் யு-16 ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளவருக்கு ரூ.5,500 மற்றும் ரிசர்வ் வீரருக்கு ரூ.2,750.ஊதியமாக வழங்கப்படவுள்ளது.
ஊதிய ஒப்பந்தத்தில் பிரிவு வாரியாக இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் பட்டியல்:
ஏ பிரிவு:
மிதாலி ராஜ்
ஜுலைன் கோஸ்வாமி
ஹர்மான்ப்ரீத் கௌர்
ஸ்மிருதி மந்தானா
பி பிரிவு:
பூணம் யாதவ்
வேதா கிருஷ்ணமூர்த்தி
ராஜேஸ்வரி கெய்க்வாட்
ஏக்தா பிஷ்ட்
ஷிக்ஷா பாண்டே
தீப்தி ஷர்மா
சி பிரிவு:
மாணஸி ஜோஷி
அனுஜா பாடீல்
மோனா மேஷ்ராம்
நுஷாத் பர்வீண்
சுஷ்மா வர்மா
பூணம் ரௌத்
ஜெமீமா ராட்ரீக்ஸ்
பூஜா வஸ்த்ராகர்
தான்யா பாட்டியா