தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.
அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு பணம், தங்கம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கூவத்தூர் தனியார் விடுதியில் இருந்து வெளியேறிய சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். எனவே, இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.