திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
குற்றாலம் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த தொடர்மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பேரருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலையில் வெள்ளம் சற்று குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மீண்டும் மாலை முதல் பெய்த தொடர் சாரல் மழை காரணமாக பேரருவியில் தண்ணீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, பேரருவியின் மையப் பகுதிக்குள் சென்று யாரும் குளிக்காதவண்ணம் ஆண்கள், பெண்கள் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இரவில் தண்ணீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் சீறிப்பாய்ந்தது. இதனால், பேரருவியில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.