இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: முதல்வர் பழனிசாமி

இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெறும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: முதல்வர் பழனிசாமி


சென்னை: இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெறும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான (சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி) மாணவர் சேர்க்கை, தமிழ்நாட்டில் இதுவரை +2 தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு கல்வியாண்டுகளிலும் மத்திய அரசு இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு நீட் தேர்வை பின்பற்ற அறிவுறுத்தியது. அதற்கு தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மாநில அரசின் கொள்கை ரீதியான எதிர்ப்பையும் மீறி, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006-ன் பிரிவுகளுக்கு முரணாக, நீட் தேர்வை இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு அறிமுகப்படுத்த முடியாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளது.

மேலும், தற்பொழுதுள்ள இந்திய மருத்துவ முறை மத்திய குழு சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான எந்தவொரு திருத்தத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பதும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனையும் கருத்தில் கொண்டு, இந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி கல்லூரிகளில், +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com