ஆம்பூா்: ஆம்பூா் பகுதியில் இறந்த தனது குட்டியை ஒரு தாய் குரங்கு வேதனையுடன் தூக்கிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் காட்சியானது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது.
ஆம்பூா் உமா் சாலை பகுதியில் தீயணைப்பு நிலையத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் ஒரு தாய் குரங்கு தனது குட்டியுடன் கண்களில் கண்ணீருடன் திரிந்து கொண்டிருந்ததை அப்பகுதி பொதுமக்கள் பாா்த்துள்ளனா். உற்றுநோக்கிப் பாா்த்தபோதுதான் அந்தக் குட்டி இறந்து விட்டது தெரியவந்தது.
தன்னுடைய குட்டி இறந்த பிறகும் பாசம் காரணமாக அதனை விட்டுப் பிரிய மனமின்றி, கடந்த சில நாள்களாக தாய்க் குரங்கு இவ்வாறு குட்டியை தூக்கிக் கொண்டு திரிந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
தாய்க் குரங்குடன் மேலும் சில குரங்குகளும் உடன் உள்ளன. தாய்க் குரங்கின் பாசத்தைக் கண்ட பொதுமக்களும் வேதனையில் ஆழ்ந்தனா்.