சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தற்போது புயல் சின்னமாகவே இருக்கிறது. இது தீவிரமடைந்தாலும் பிறகு வலுவிழந்து புயலாகவேக் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது சென்னைக்கு மிக அருகே கஜா புயல் இருந்தாலும் கடலூர் - பாம்பன் இடைப்பட்ட பகுதியில்தான் நாளை மாலைக்கு மேல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் கஜா புயல் தற்பொழுது சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 5800 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 15ம் தேதி மாலை பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து வருகிறது. இது அவ்வப்போது தனது வேகத்தை மாற்றிக் கொண்டு வருகிறது.
இதன் காரணமாக நாளை கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 - 90 கி.மீ. வேகத்திலும் சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.
இந்த மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கன மழை பெய்யும். மீனவர்களைப் பொறுத்தவரை 15ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை நாளை முதல் மிதமான மழை அடுத்து வரும் 2 அல்லது 3 நாட்களுக்கு பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.