கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல், அலைகளின் எழுச்சியின்றி அமைதியாக காணப்படுகிறது.
இதனால், முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் விசைப்படகுகளை வேறு இடத்துக்கு மாற்றி வருகின்றனர். ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் வழக்கமாக அலைகளின் எழுச்சி மிதமாகவும், சீற்றத்துடனும் காணப்படும்.
ஆனால், கஜா புயல் காரணமாக இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே கடலில் அலையின்றி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும், கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் பாம்பன் வடக்கு துறைமுகத்தில் இருந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை தெற்குவாடி துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.
நாகையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் பாம்பன் துறைமுகத்தில் கடல் அலையின்றி உள்ளது. புயலின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடும் என மீனவர் ஒருவர் தெரிவித்தார்.