கமுதி அருகே பசும்பொன்னில் அண்மையில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க வந்த வாகனங்களில் 86 வாகனங்கள் விதிகளை மீறியதாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா, ஜயந்தி விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு வெளிமாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு, வழித்தடங்கள், கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குருபூஜை தினத்தன்று மாவட்ட நிர்வாகத்தின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதாக கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்து, இதுவரை 86 நான்கு சக்கர வாகனங்கள் மீது கமுதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் விதிகளை மீறிய இருசக்கர வாகனங்கள் மற்றும் தனி நபர்கள் குறித்து கேமரா பதிவு மூலம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.