கஜா புயல் காரைக்காலின் கிழக்கே 125 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், நாகைக்கு தெற்கே கரையைக் கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் 9 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,
கஜா புயல் காரைக்காலுக்கு கிழக்கே 125 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாகைக்கு தெற்கே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேடார் அளவின்படி புயலின் கண் பகுதி 26 கிலோ மீட்டருக்கு இருக்கிறது. புயல் தற்போது 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இரவு 10 மணி முதல் காற்று வேகமாக வீசக்கூடும். இது தற்போது தீவிரபுயலாக உள்ளது. கரையைக் கடக்கும்போது மணிக்கு 80 முதல் 100 கி.மீ வரை வரை காற்று வீசக்கூடும்" என்றார்.
இதற்கு முந்தைய அறிவிப்பில் கஜா புயலின் வெளிப்பகுதி கரையைத் தொட்டதாக தெரிவிக்கப்பட்டது.