கஜா புயல் இன்று மாலை கடலூர் பாம்பன் இடையே கரையை கடக்கும் நிலையில் சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் கடலூர்-பாம்பன் இடையே இன்று மாலை கரையை கடக்க இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் இன்று அதிகாலை முதலே காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வேளச்சேரி, கிண்டி, அனகாபுத்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வண்டலூர், பெருங்களத்தூர், வளசரவாக்கம், போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனிடையே கஜா புயல் காரணம் சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.