நடிகை ஜோதிகா நடித்து வெள்ளிக்கிழமை (நவ.16) வெளியாக உள்ள காற்றின் மொழி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில், நடிகை ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் வரும் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை இணையதள சேவை நிறுவனங்கள், கேபிள் டிவிக்கள் மற்றும் இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்ரமணியன், அதிக பொருள்செலவில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.
காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் திரைப்படத்தின் அனைத்து உரிமைகளும் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கே சொந்தமானது. எனவே, திரைப்படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மற்றும் இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, காற்றின் மொழி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.