சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா விண்கல தயாரிப்புப் பணிகள் அடுத்த 4 ஆண்டுகளில் நிறைவடையும் என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
கடலூர் மாவட்ட நிர்வாகம், இந்திய மருத்துவக் கழகம், நம்ம கடலூர், கடலூர் சிறகுகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அரிமா மற்றும் சுழற்சங்கங்கள் சார்பில் கடலூர் நகர அரங்கில் 2-ஆவது தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. புத்தகக் கண்காட்சியை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை சிறு வயதிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். படித்துக் கொண்டே இருப்பது ஓர் ஆனந்தம். இதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும். தமிழை முத்தமிழுடன் 4-ஆவது தமிழாக அடுத்தக் கட்டத்துக்கு அறிவியல் தமிழ்தான் எடுத்துச் செல்லும் என்றார் அவர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சந்திராயன்-2 பணிகள் இஸ்ரோ சார்பில் நடைபெற்று வருகின்றன.
செயற்கைக்கோள், நிலவில் இறங்கும் விண்கலம் உள்ளிட்டவற்றை நாம் தயாரித்து வருவதால் காலதாமதமாகி வருகிறது.
நிலவில் மனிதனை இறக்கி, மறுபடியும் அந்த விண்கலத்தை பூமிக்கு திருப்ப வேண்டியிருப்பதால் இந்தத் திட்டத்தை மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகிறோம். அதேபோல, சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டமும் நடைமுறையில் உள்ளது. இந்த விண்கலத்தில் 5 கருவிகளைப் பொருத்தி, சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை நிலைநிறுத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்தப் பணிகள் வரும் 4 ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும் என்றார் அவர்.
முன்னதாக, எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் வரவேற்க, ஒருங்கிணைப்பாளர் என்.ஜனார்த்தனன் நன்றி கூறினார். புத்தகக் கண்காட்சி வருகிற 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.