தமிழக அரசு அறிக்கை சமர்பிக்கும் வரை காத்திருக்காமல் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய குழுவை அனுப்பவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே ஆர் ராமசாமியுடன் கஜா புயலால் காரைக்குடியில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தார். புயல் நேரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டினார்.
மேலும், தமிழக அரசு அறிக்கை சமர்பிக்கும் வரை காத்திருக்காமல், புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவை அனுப்பி மதிப்பிட்டு, மீட்புப் பணிக்கான உரிய தொகையை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.