சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக வழக்குரைஞர் பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் 59 நீதிபதிகளே இருந்துவரும் நிலையில், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வரும் பி.புகழேந்தி, உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இதற்கான நியமன உத்தரவிற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பே புகழேந்தியின் பெயர் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பதவியேற்ற நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக புகழேந்தி செயல்படுவார்.
கடந்த ஒரு வாரத்தில் நீதிபதி ரமேஷ் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கும், சத்ருகானா புஜாஹரி ஒடிசா உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர். நீதிபதி எஸ்.பாஸ்கரன் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.