தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி போகிப் பண்டிகையும், 15-ஆம் தேதி தைப் பொங்கலும், 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், 17-ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படவுள்ளது. இந்த தினங்கள் அனைத்தும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13, 14 ஆகிய இரு நாள்களும் சனி, ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கமான விடுமுறையாக இருக்கும். எனவே தொடர்ந்து 6 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியது: பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வார்கள். இதற்காக ஜனவரி 10 அல்லது 11-ஆம் தேதியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. www.tnstc.in என்ற இணையதளத்தின் மூலம் 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. சென்னையிலிருந்து கடந்த ஆண்டு ஜன.11, 12, 13 தேதிகளில் 5,158 சிறப்புப் பேருந்துகள் உள்பட 11, 958 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவ்வாண்டும் கூடுதலான பேருந்துகள் அறிவிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.