தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் சனிக்கிழமை வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கருணாஸுக்கு நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் அதிமுக அரசை விமர்சிப்பதாக எம்எல்ஏ ஒருவரின் புகாரை தொடர்ந்து கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திங்கள்கிழமை காலையில் பேரவைத் தலைவர் தனாபலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் பேரவைத் தலைவர் தனபால் உடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார். இவர்களுடன் அமைச்சர் தங்கமணி மற்றும் கொறடா ராஜேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்நிலையில், நெல்லையில் 2017-ல் பூலித்தேவர் பிறந்தநாள் விழாவில், தேவர் பேரவைத் தலைவர் முத்தையா காரை சேதப்படுத்திய வழக்கில் எம்எல்ஏ கருணாஸ் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.