கடலோர மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை பயிற்சி

கடலோர மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை பயிற்சிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பயிற்சிகளால் பொதுமக்கள் பீதியோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை என தமிழக அரசு
கடலோர மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை பயிற்சி


கடலோர மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை பயிற்சிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பயிற்சிகளால் பொதுமக்கள் பீதியோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்திய கடல்சார் தகவல் மையத்தில் உள்ள இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பின் மூலம் அனைத்து கிழக்கு கடலோர பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் இந்தியப் பெருங்கடல் அலை 2018' என்ற பெயரில் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த மாதிரியான பயிற்சி இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள இந்தியா உட்பட 24 நாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- இதுவொரு ஒத்திகை பயிற்சியாகும். இதுகுறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. இப்பயிற்சியில் தமிழகத்தின் கடலோர கிராமங்கள் பங்கேற்றன.
சென்னை சீனிவாசபுரம் பனையூர்குப்பம் அய்யம்பேட்டை, சிலாம்பிமங்களம், காஞ்சிபுரம் பெரியகுப்பம் கிராமம், கானத்தூர் - ரெட்டிகுப்பம், கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் -லீபுரம்-கொட்டில்பாடு - லட்சுமிபுரம், நாகப்பட்டினம் பிரதாமராமபுரம், சாத்தான்குடி, புதுக்கோட்டை பொன்னகரம், மீமிசல் - ஆர்.புதுப்பட்டினம், ராமநாதபுரம் திருப்பாலைக்குடி, கன்னிராஜபுரம் ஆகிய இடங்களில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
இதேபோன்று, தூத்துக்குடி வேம்பார், இனிகோ நகர் படுகப்பட்டு, தஞ்சாவூர் ராஜமடம் கீழத்தோட்டம், சோமநாதபட்டினம், திருநெல்வேலி கூட்டாபுளி, குட்டம்பனை, திருவள்ளூர் பழவேற்காடு ஓபசமுத்திரம், திருவாரூர் துரைக்காடு (கோவிலன் தோப்பு), தில்லைவிலகம் (செங்கன்காடு), விழுப்புரம் நடுக்குப்பம் - வானூர், மந்தவாய்புதுக்குப்பம் ஆகிய கிராமங்களிலும் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 5,054 கிராம மக்கள் பங்கேற்றனர்.
மேலும், இந்தப் பயிற்சியில் வருவாய், ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை, தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, மருத்துவம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி துறை உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.
இத்துடன், தேசிய பேரிடர் மீட்புப் படை, கடற்படை மற்றும் தொலைத்தொடர்புத் துறை போன்ற துறைகளும் இதில் பங்கு பெற்றன. 
சுனாமி வரும் நிலையில், இந்திய கடல்சார் முன்னெச்சரிக்கை அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கைகள் பெறப்படும்போது, அந்தத் தகவல் பரிமாற்றமானது அரசு துறைகள் மூலம் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பதை இந்த ஒத்திகை பயிற்சியின் மூலம் சோதிக்கப்பட்டது என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com