சிறந்த உள்கட்டமைப்பு காரணமாக தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
சென்னை வேலப்பஞ்சாவடியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை 27-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 36 பேருக்கு முனைவர் பட்டமும், 13 பேருக்கு ஆய்வு நிறைஞர் பட்டமும், 285 பேருக்கு முதுநிலை பட்டமும், 1,969 பேருக்கு இளநிலை பட்டமும் வழங்கப்பட்டன.
விழாவில், சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கி ஆளுநர் பட்டமளிப்பு உரையாற்றியது:
சிறந்த உள்கட்டமைப்பு காரணமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. அத்துடன் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதால், தமிழகத்திலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மிகச்சிறப்பாக வளர்ந்து வருகின்றன. இதனால் தமிழகம் நாட்டிலேயே உயர்கல்வியின் மையமாக உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் ஆளுநர்.
பட்டமளிப்பு விழாவுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் - வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தார். அவர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இக்கல்வி நிறுவனத்தின் இணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதாக விழாவில் அறிவித்தார்.
துணை வேந்தர் கே. மீர் முஸ்தபா உசேன், கல்வி நிறுவனத் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார், செயலர் ஏ.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.