லண்டன் மாநகரில் மின்சாரப் பேருந்து இயக்கத்தையும், பணிமனையையும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
சென்னை மாநகர பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், சுற்றுப்புறச் சூழல் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலும் மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக லண்டன் மாநகரில் இயங்கி வரும் சி-40 என்ற முகமையின் வழிகாட்டுதல்படி, சென்னையில் மின்சாரப் பேருந்துத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி அந்த அமைப்பின் பிரதிநிதிகள் சென்னை வந்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் லண்டனில் நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று லண்டனுக்குச் சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசு கூடுதல் தலைமைச் செயலர் டேவிதார் ஆகியோர் அங்கு மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளையும், பணிமனைகளையும் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர். அத்துடன் அவற்றின் பராமரிப்பு, இதர தொழில்நுட்பங்கள், செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.