கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
நன்மங்கலம் காப்புக்காடு பகுதியில் காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளைக்கு கடந்த 1975-ஆம் ஆண்டு, நன்மங்கலம் காப்புக்காடு பகுதியில் 40 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இந்த இடத்தில் காயிதே மில்லத் கல்லூரி கட்டப்பட்டது. கல்லூரி கட்டுமானத்துக்குப் பின் பயன்படுத்தப்படாமல் இருந்த 29.33 ஏக்கர் நிலத்தை மீண்டும் எடுத்துக் கொள்வதாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்லூரி அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசின் முடிவு சரிதான் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் , இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.
மேலும், அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகள், நில அளவீட்டுத்துறை அதிகாரிகள் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி நேரில் சென்று அளவிட வேண்டும். இந்த விவரங்கள் தொடர்பான அறிக்கையை வரும் செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.