டாஸ்மாக் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணிக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் எம்.செல்வம் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு இளங்கலைப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பிற துறைகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கவில்லை. அரசு விதிமுறைகளுக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் கல்வித் தகுதியை நிர்ணயித்துள்ளது சட்ட விரோதமானது. டாஸ்மாக் கடைகளில் பட்டப் படிப்பை முடிக்காத பலர் விற்பனையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
எனவே, இளநிலை உதவியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கும் கோரிக்கை மனு அளித்தோம். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. மேலும், இதற்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பு தமிழில் இல்லை. எனவே, இளநிலை உதவியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பை கல்வித் தகுதியாக நிர்ணயிக்க டாஸ்மாக் நிறுவனத்தின் பொது மேலாளருக்கு உத்தரவிடவும், இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சத்ருஹான புஜ் ஹரி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் லெசி சரவணன் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இளநிலை உதவியாளர் பணிக்காக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.