தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பரவலான மழையால் மாநிலத்தின் மின்தேவை சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மாநிலத்தின் மொத்த மின்தேவை 14,500 மெகாவாட்டாக இருந்தது. இந்தச் சூழலில் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பரவலான மழையால் மாநிலத்தின் மின்தேவை கணிசமான அளவு குறைந்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது: சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் மாநிலத்தின் மொத்த மின்தேவை 13,000 மெகாவாட்டாக இருந்தது.
ஆனால் நடப்பாண்டில் இதே காலக்கட்டத்தில் கடந்த சில தினங்கள் முன்பு வரை வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் மாநிலத்தின் மொத்த மின்தேவை 14,500 மெகாவாட்டாக அதிகரித்தது. அதாவது வெயிலின் தாக்கத்தால் ஏ.சி., மின்விசிறி போன்றவற்றின் பயன்பாடு பகல், இரவு ஆகிய நேரங்களில் அதிகரித்ததன் காரணமாக மின்தேவையும் அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்ததுள்ளதால், ஏசி, மின்விசிறி போன்றவற்றின் பயன்பாடும் சற்று குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த மின்தேவை 12,000 மெகாவாட் அளவாகவே உள்ளது.
மேலும் தென்மாவட்டங்களில் மீண்டும் காற்று அதிகமாக வீசுவதால், காற்றாலைகளிலிருந்து சுமார் 2,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது.
மழைபெய்து வருவதாலும், காற்றாலை மின்சாரம் அதிகரித்துள்ளதாலும் தூத்துக்குடி உள்ளிட்ட அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.