வருவாய் நிர்வாக ஆணையரகத்திடம் அளிக்கப்படும் மனுக்களை இணையதளம் மூலமாகக் கண்காணிக்கும் புதிய திட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புதன்கிழமை தொடங்கினார்.
வருவாய் நிர்வாகத் துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை பொது மக்கள் அளித்து வருகின்றனர். இந்த மனுக்களின் நிலையைக் கண்காணிக்கவும், அவற்றின் மீது நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் இதுவரை தனிப்பட்ட மின்னணு மூலமான கண்காணிப்பு இல்லாமல் இருந்து வந்தது. இப்போது, மின்னணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், வருவாய் நிர்வாக ஆணையரால் பெறப்படும் மனுக்களின் மீது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், துரிதப்படுத்தவும் தேசிய தகவலியல் மைய உதவியுடன் இணையதளப் பயன்பாடு (www.gdp.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது.
வருவாய் நிர்வாக ஆணையரக அலுவலகத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்களை இணையதள பயன்பாட்டின் மூலமாக தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். இந்த மனுக்களுக்கு செல்லிடப் பேசி குறுஞ்செய்தி மூலமாக உடனடியாக ஒப்புகை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் மனுக்களின் நிலையை இணையதளத்தில் தெரிந்து கொள்ள வசதியும் செய்யப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையரகத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் தீர்வு மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்தப் புதிய இணையதளத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் விரைவாகவும், உரிய முறையிலும் தீர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்படும்.
முன்னெச்சரிக்கை அமைப்பு: சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் ஆகியன கூட்டாக வடிவமைத்துள்ளன.
இந்த அமைப்பானது சென்னையில் ஏற்படக்கூடிய வெள்ள அபாய நிலையையும், மழையளவு, கடல் அலை வேகம், ஆறுகள், நீர்த் தேக்கங்களில் நீரின் அளவுகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கண்காணிக்கும். இந்த அமைப்பானது நடப்பாண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் பசநஙஅதப என்ற அமைப்புடன் இணைந்து பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளது. முன்னெச்சரிக்கை தகவல்கள் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு TNSMART அமைப்பின் மூலம் அளிக்கப்படும்.
ஒப்பந்தம்: இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் புதன்கிழமை பரிமாறிக் கொள்ளப்பட்டது. வருவாய் நிர்வாக ஆணையாளர் கொ.சத்யகோபால் மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குநர் வி.ரமணமூர்த்தி ஆகியோர் ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மை ஆணையாளர் ராஜேந்திர ரத்னு, வருவாய் இணை ஆணையாளர் எம்.லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.