இஸ்ரோவின் 2-ஆவது ஏவுதளத்தை தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்து, மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் கனிமொழி கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
"இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஒரே ஒரு ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. விண்வெளித் தொழில் நுட்பத்தில் முன்னேறியுள்ள பல நாடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளங்களைப் பெற்றிருக்கின்றன.
அதே போன்று இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் துறையிலும் முன்னேற்றங்கள் ஏற்பட, மேலும் சில ஏவுதளங்களை அமைக்க வேண்டியது அவசியம். அதனால், இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தை தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் அமைப்பது சிறப்பாக அமையும்.
விஞ்ஞானிகளின் தரவுகளையும் திட்டச் சாத்தியக்கூறு ஆய்வுகளையும் அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கோரிக்கையை விடுக்கிறேன்.
இஸ்ரோவின் ஓா் அங்கமாக இருக்கும் இந்திய அரசு அமைப்பான திரவ உந்துவிசை பொறி மையம் நிறுவனத்தின் முன்னாள் தலைமைப் பொதுமேலாளா் ஒருவரின் கருத்துப்படி, மங்கள்யான் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்டிருந்தால், அது இப்போது சுமந்திருக்கக்கூடிய 1,350 கிலோ எடையுள்ள உபகரணங்களுக்குப் பதில், 1,800 கிலோ எடை கொண்ட உபகரணங்களை கூடுதலாக சுமந்து சென்றிருக்க முடியும் என்று கூறியுள்ளாா்.
மேலும், பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதுடன், மகேந்திரகிரியில் இருக்கும் திரவ உந்துவிசை மையத்துக்கு அருகே இருப்பதோடு, உகந்த காலநிலையும் இருப்பதால் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க சிறந்த இடமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனா். எனவே, இஸ்ரோவின் 2-ஆவது ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கடிதத்தில் கனிமொழி கூறியுள்ளாா்.