ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ள குழுவிடம் பொதுமக்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆலையின் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவிடம் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்துள்ளோம்.
தாமிர ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டு, அவற்றின் மீது சவுடு மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நிலமும், நிலத்தடி நீரும் பாதிப்படைந்துள்ளது. தாமிரக் கழிவுகளை எங்கு கொட்டினாலும் அது நோய்களை ஏற்படுத்தும். அதனால் இந்த ஆலையை மூடவேண்டும் எனக் கூறியுள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டு, தங்களது கருத்துகளை அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.