தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை தூத்துக்குடி வந்தனர்.
தொடர்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஆர். கண்ணன், மனோகரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லெவிங்டன் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆய்வு தொடர்பான அறிக்கை 6 வாரங்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்படும் என, ஆய்வுக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்தார்.
அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினரிடம் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அவரவர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒருவரிடம் இருந்து மட்டும் இந்த மனு பெறப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி உடனடியாக வெளியேற்றினார்.
மேலும் அங்கு ஸ்டெர்லைட் ஆதரவாக மனு வழங்க வந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தற்போது அங்கு அதிகளவிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.