லஞ்சம் வாங்கியதாக கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின், கடலூரில் உள்ள தனியார் வங்கியில் இருக்கும் 3 லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே, கடலூரில் உள்ள அரசு வங்கிகளின் பெட்டகங்களை திறந்து விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கடந்த வாரம் சோதனையிட்டனர்.
வாகன தகுதிச்சான்று வாங்க ரூ.25 ஆயிரத்தை லஞ்சமாகப் பெற்ற போது, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, அவரது உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் கையும் களவுமாக கடந்த 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்த கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.35 லட்சம் ரொக்கம், 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, பாபுவின் வங்கிக் கணக்கு, வங்கிப் பெட்டகங்கள் முடக்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில், கடலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட இரு வங்கிகளில் பாபு வைத்திருந்த 3 பெட்டகங்களை டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் திறந்து சோதனையிட்டனர்.
அதில், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள் இருந்தன. இதையடுத்து, அவற்றை பெட்டகத்தில் வைத்துவிட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, வேறு வங்கிகளில் பாபு வைத்துள்ள பெட்டகங்களை திறந்து சோதனையிட்ட பிறகு, அனைத்துப் பெட்டகங்களிலும் உள்ள நகைகள், பொருள்களை பறிமுதல் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று கடலூரில் தனியார் வங்கி பெட்டகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2000 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வங்கி பெட்டகங்களில் இருக்கும் நகைகளும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படாது என்றும், பெட்டகங்களில் என்னென்ன இருந்தன என்பது குறித்து பதிவு செய்து, வங்கி மேலாளர் மற்றும் பாபுவின் சார்பில் ஒருவரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்ட வங்கிப் பெட்டகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று தெரிகிறது.