தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசியதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டார். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அவர் ஞாயிற்றுக்கிழமை மாலையே வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க வேண்டும் என அவரது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினராக ஏன் நீடிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக சட்ட விதிகளை மீறி பேசக்கூடாது என்றார்.
தொடர்ந்து பேசிய ஜெயகுமார், பல்வேறு சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கருணாஸை கைது செய்ய வேண்டிய சூழநிலை ஏற்பட்டது. இனியும் சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் வகையில் பேசினால், அது கருணாஸ் பதவிக்கு ஆபத்தாக முடியும்.
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேசிய கருத்துக்கு அவர் பதில் சொல்லிதான் ஆக வேண்டும் என்றார்.